×

‘நான் முதல்வன்’ திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்பு: ஜனவரி வரை நடத்த கல்வித்துறை உத்தரவு

நார்கோவில்: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்புகள் ஜனவரி மாதம் வரை நடத்த கல்வித்துறையால் உத்தரவிடப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்புகள் கல்வித்துறையால் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பொருள் சம்பந்தமாக வகுப்புகள் நடத்துவதற்கான பாட வேளையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் ஜனவரி வரை வகுப்புகளும், பிப்ரவரி மாதம் மதிப்பீடும் நடைபெற இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் தனித்தனி மதிப்பீடும் நடக்கிறது.

நம்மை நாம் புரிந்துகொள்ளுதல், உயர் கல்வி படிப்புகளை புரிந்துகொள்ளுதல், மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், உயர்கல்வியில் சேருவதற்கான முன் தயாரிப்புகள், அச்சம் தவிர், உயர்கல்வி படிக்கட்டுகள், உயர்கல்வி படிப்புக்கான மாற்று வழிகள், உயர் கல்வியில் சேருவதற்கான முன் தயாரிப்புகள், வேலை உலகை புரிந்துகொள்ளுதல், வேலை குறித்த கண்ணோட்டம், வேலை சார்ந்த நம்பிக்கைகள், வேலைவாய்ப்பு தகவல்கள், உயர்கல்வி படிப்புக்கான மாற்று வழிகள், வேலைவாய்ப்பு பெறுவதற்கான முன் தயாரிப்புகள், போட்டி தேர்வுக்கு தயாராதல், நாம் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு மாதவாரியாக கற்பிக்க வேண்டிய உயர்கல்வி வழிகாட்டி பாட திட்டங்களை, உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்குதல் வேண்டும்.

இதற்கான வகுப்புகள் பள்ளியின் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்தப்பட வேண்டும். பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் உள்ள விபரங்கள் மாணவர்களுக்கு உரிய முறையில் கற்பிக்கப்படுகின்றனவா? என்பதையும், அதன் மூலம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனரா? என்பதையும் தலைமை ஆசிரியர்கள் பார்வையிட்டு எமிஎஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் மாநில திட்ட இயக்குநரால் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி வகுப்பு: ஜனவரி வரை நடத்த கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Narcoville ,
× RELATED வைகாசி விசாகம்: திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்